இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதானா?
இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆட்டத்தின் இரண்டாவது நாளிலிருந்து நாங்கள் போட்டியில் இருப்பதாகவே உணர்ந்தேன். நான்காவது இன்னிங்ஸில்கூட இலங்கை வீரர்கள் கடின உழைப்பை வழங்கியதாக நினைக்கிறேன். இந்தத் தோல்வியை எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆனால், இது ஒரு நல்ல ஆட்டமாக அமைந்தது.
ஆட்டத்தின் முதல் மூன்று நாள்கள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் காலே ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் எங்களுக்கு அழுத்தம் அளிக்கும் விதமாக விளையாடினார்கள். இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்ததுடன், அதிக ரன்கள் குவித்தனர். நாங்கள் பேட்டிங் செய்தபோது, சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்தோம். அங்கிருந்து போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியது என்றார்.

